திருச்செந்தூர்: திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 31ம்தேதி தேரோட்டம் நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா நாளை மறுநாள் (21ம்தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு உகப்படிப்பு பணிவிடை, 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
கொடியை வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் ஏற்றுகிறார். காலை 7 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் பவனி, 9 மணிக்கு அன்னதர்மம், 12 மணிக்கு உச்சி படிப்பு பணிவிடை, 1 மணிக்கு அன்னதர்மம், மாலை 4 மணிக்கு உகப்படிப்பு பணிவிடை, 5 மணிக்கு புஷ்ப வாகன பவனி, 6 மணிக்கு அன்னதர்மம், இனிமம் வழங்குதல் நடக்கிறது.
11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலையில் உகப்படிப்பு, பணிவிடை, மதியம் உச்சிப் படிப்பு பணிவிடை, அன்னதர்மம், மாலையில் உகப்படிப்பு பணிவிடையும் நடக்கிறது. இதேபோல் விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில், அன்னம், சர்ப்பம், கருட வாகனம், குதிரை, ஆஞ்சநேயர், இந்திரன் என பல்வேறு வாகனங்களில் பவனி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 31ம்தேதி (திங்கள்) பகல் 12.05 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்தை தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் களக்காடு சுந்தரபாகவதர் குமார் ஜெயராமன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.
அன்று இரவு 1 மணிக்கு காளை வாகன பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுத்துரை, துணை தலைவர் அய்யா பழம், துணை செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமையா நாடார், இணை தலைவர்கள் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், இணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், செல்வின், வரதராஜபெருமாள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர்.