சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதியப்பட்ட வழக்கிலிருந்து சென்னை துறைமுக அதிகாரியை விடுதலை செய்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியை சேர்ந்த ராஜீவ் கோலி என்பவர் சென்னை துறைமுகத்தில் 1990ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பைலட், டாக் மாஸ்டர், ஹார்பர் மாஸ்டர் போன்ற பணிகளில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக 27 லட்சத்து 23 ஆயிரத்து 475 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
கடந்த 2004ம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கு தொடர்பாக 113 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அனைத்து தரப்பு சாட்சி விசாரணையும் முடிந்த நிலையில் இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கே.மெஹபூப் அலி கான் தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில், வருமான வரி கணக்குகளின் அடிப்படையில் குறிப்பிட்ட ஆண்டுகளில் 26 லட்சத்து 53 ஆயிரத்து 270 ரூபாயை சம்பளமாகவே வாங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு அரசு ஊழியரும் சேமிக்கும் அளவுக்கே இது இருப்பதாக அவர் தரப்பில் வாதிடப்பட்டுள்து. கணக்கீடு அடிப்படையில் 27 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக கூறிய குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்கவில்லை. எனவே, ராஜீவ் கோலி விடுதலை செய்யப்படுகிறார். வருமானம் மற்றும் சொத்துகளை கூடுதலாக மதிப்பீடு செய்யாமல் முறையான வகையில் கணக்கீடு செய்திருந்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்காது. மனுதாரரின் 20 ஆண்டுகால வாழ்க்கை பாதுகாக்கப்பட்டு இருக்கும். தாமதத்திற்கான பழியை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இல்லை. நீதி வழங்க 20 ஆண்டுகள் ஆனதற்கு நீதிமன்றம் வருத்தத்தை பதிவு செய்கிறது என்று கூறியுள்ளார்.