சென்னை: மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் வேலை வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவித்தார். அதன்படி 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட கடந்த ஏப்ரல் 20ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை கடந்த 22ம் தேதி முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில், சென்னை மண்டலத்தில் 138, கோவை மண்டலத்தில் 78, மதுரை மண்டலத்தில் 125, சேலம் மண்டலத்தில் 59, திருச்சி மண்டலத்தில் 100 என்ற முறையே 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்படாது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் வேலை வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுக்குறித்து கூறியுள்ள டாஸ்மாக் நிர்வாகம், அனைத்து மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் மூடப்பட்ட கடைகளின் பணியாளர்களை பணியமர்த்துவது தொடர்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நிர்வாக அடிப்படையில், கடை பணியாளர்கள் பின்வரும் அறிவுறுத்தல்களின்படி பணியமர்த்தப்பட வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள கடை ஊழியர்களின் மாவட்ட முதுநிலை, மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் செய்ய மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் பின்பற்றப்பட வேண்டும்.
இது தொடர்பாக, 1,உதவி விற்பனையாளர்கள், 2, விற்பனையாளர்கள் மற்றும் 3, மேற்பார்வையாளர் உள்ள கடை ஊழியர்களின் மூப்புப் பட்டியல் மாவட்ட மேலாளர், முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகங்கள் மற்றும் டிப்போக்களில் உள்ள முக்கிய இடங்களில் அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட வேண்டும் என்றும் மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் வேலை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.