பொன்னேரி: ஜார்க்கண்ட் முதலமைச்சரை துரத்தி துரத்தி கைது செய்த ஒன்றிய அரசு, துறைமுகங்கள் வழியாக போதை பொருள் கடத்தும் அதானி துறைமுகம் மீது ஏன் நடவடிக்கை இல்லை என திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் கூறியுள்ளார். மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. ரயில்வே தண்டவாளத்தின் மேல் பாலப் பணிகள் முடிவடைந்த நிலையில், இணைப்பு பாலப் பணிகள் தொடங்கப்படாமலே இருந்து வந்தது. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கந்தசாமி, லதா, ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் திமுக நகர செயலாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார், துரை சந்திரசேகர் எம்எல்ஏ ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். இந்த உயர்மட்ட மேம்பால பணிகள் ஜூன் 2025ல் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஜெயக்குமார் எம்பி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை துரத்தி துரத்தி கைது செய்த ஒன்றிய அரசு, அதானியின் துறைமுகங்கள் வழியாக டன் கணக்கில் கஞ்சா, போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இதுவரையில் அதானி துறைமுகம் மீது ஏன் நடவடிக்கை இல்லை? மேலும் கடத்தல் போதைப் பொருட்கள் அனைத்தும் தேர்தல் ஆதாயத்திற்காக கருப்பு பணமாக மாற்றி வைக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். இந்நிகழ்ச்சியில், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெகதீசன், மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் ரவி, விசிக மாவட்ட செயலாளர் நீலமேகம், மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர், மீஞ்சூர் நகர செயலாளர் தமிழ்உதயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.