ராஞ்சி: மதுபான ஊழல் தொடர்பாக ஜார்க்கண்ட் அமைச்சர் மகன் வீட்டில் அமலாக்கத்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது. ஜார்க்கண்ட் கூட்டணி அரசில் ராமேஷ்வர் ஓரான் நிதியமைச்சராக உள்ளார். இங்கு மதுபான விற்பனையில் ஊழல் நடந்துள்ளதாகவும், இதில்,ராமேஷ்வரின் மகன் ரோகித் ஓரானுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று ராஞ்சியில் உள்ள ராமேஷ்வர் ஓரானின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ராமேஷ்வரும், அவரது மகன் ரோகித்தும் ஒரே வீட்டில்தான் வசித்து வருகின்றனர். அதே போல் தும்கா, தியோகர், கோடா மாவட்டங்களில் உள்ள 34 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது. மதுபான வியாபாரிகளின் வீடுகளிலும் சோதனை நடந்தது. இந்த சோதனைக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ,மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் கூறுகையில்,‘‘நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சிக்கு கெட்டபெயர் ஏற்படுத்தவே சோதனை நடத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இது போல் சோதனை அமலாக்கத்துறை நடத்துமா?.பாஜ ஆளும் மாநிலங்களில் ஊழலே நடக்கவில்லையா?என கேள்வி கேட்டுள்ளா். அதிகாரிகள் கூறுகையில், ‘‘ராமேஷ்வரும், அவரது மகன் ரோகித்தும் ஒரே வீட்டில்தான் வசித்து வருகின்றனர். சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் சோதனை நடத்தப்பட்டுள்ளது’’ என்றனர். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான ராமேஷ்வர் காங்கிரசை சேர்ந்தவர். மன்மோகன் சிங் ஆட்சியின் போது இவர் ஒன்றிய அமைச்சராக இருந்துள்ளார்.