Sunday, May 12, 2024
Home » சேலம் உள்பட 11 இடங்களில் கடை நடத்தி பல கோடி நகை, பணத்துடன் நகைக்கடை அதிபர் ஓட்டம்: சீட்டு கட்டிய ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சி

சேலம் உள்பட 11 இடங்களில் கடை நடத்தி பல கோடி நகை, பணத்துடன் நகைக்கடை அதிபர் ஓட்டம்: சீட்டு கட்டிய ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சி

by Arun Kumar

சேலம்: சேலம் உள்பட 11 இடங்களில் கடை நடத்தி கோடிக்கணக்கான நகை, பணத்துடன் நகைக்கடை அதிபர் மாயமானதால் சீட்டு பணம் கட்டிய ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.சேலம் வீராணம் வலசையூர் பகுதியை சேர்ந்தவர் சபரிசங்கர். இவர் எஸ்விஎஸ் என்ற பெயரில் அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் நகை கடைகளை வைத்திருந்தார். அதேபோல் ஆத்தூர், அரூர், தர்மபுரி, நாமக்கல் உள்பட 11 இடங்களில் கிளைகளை தொடங்கி நகை கடை நடத்தி வந்தார்.

இங்கு பழைய நகைகளை வாங்குவது மற்றும் நகை சீட்டு ஆகியவற்றை நடத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களாக அம்மாபேட்டை மற்றும் சீலநாயக்கன்பட்டியில் உள்ள நகை கடைகள் மூடப்பட்டிருந்தது. இதனால், சீட்டு கட்டியவர்கள், நகை எடுக்க வந்தவர்கள் கடைக்கு வந்து பார்த்துவிட்டு சென்றனர்.பின்னர், அவர்கள் நகை கடை இரண்டு நாட்களாக மூடப்பட்டிருப்பதை குறித்து விசாரணை நடத்தியபோது சபரி சங்கர், கடைகளை நிரந்தரமாக மூடிவிட்டு நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது. இதனால் நகை சீட்டு கட்டியவர்கள், நகை வாங்க வந்தோர் என ஆயிரக்கணக்கான மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதேபோல் ஆத்தூர், தர்மபுரி, நாமக்கல் உள்பட 11 இடங்களில் உள்ள நகை கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அவர் பல கோடி மதிப்புள்ள நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த நகை சீட்டு கட்டியவர்கள், கடை ஊழியர்கள் ஆகியோர் நேற்று காலை கடைகள் முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த அன்னதானப்பட்டி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீசில் புகார் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர். கடை ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருப்பதும் தெரியவந்தது. இதில் 4 பேர் அன்னதானப்பட்டி போலீசில் புகார் தெரிவித்தனர். அதே நேரத்தில் அம்மாப்பேட்டை போலீசில் ரஞ்சித் என்பவர் ரூ.11 லட்சம் வரை நகைக்காக சீட்டு பணம் கட்டியதாக புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக 4 ஊழியர்களை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

You may also like

Leave a Comment

four − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi