Thursday, November 30, 2023
Home » சென்னையில் 89% பெண்கள் அரசு பேருந்தையே பயன்படுத்துகிறார்கள் இலவச பேருந்தால் பெருமளவு பணம் மிச்சம்: பெண்கள் மகிழ்ச்சி; கருத்துகேட்பில் தகவல்

சென்னையில் 89% பெண்கள் அரசு பேருந்தையே பயன்படுத்துகிறார்கள் இலவச பேருந்தால் பெருமளவு பணம் மிச்சம்: பெண்கள் மகிழ்ச்சி; கருத்துகேட்பில் தகவல்

by Arun Kumar

சென்னை: தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மகளிருக்கு இலவச பஸ் பயணம் என்ற புரட்சிகரமான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இந்த முன்னோடி திட்டத்தை வட மாநிலங்களிலும் செயல்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில், ‘என்ன நினைக்கிறார்கள் சென்னை பெண்கள்’ என சென்னை மாநகராட்சி ஒரு ஆய்வை நடத்தி இருக்கிறது.

சென்னை முழுவதும் 3 ஆயிரம் பேரிடம் இந்த கருத்துக் கேட்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் 2,432 பேர் பெண்கள், 568 பேர் ஆண்கள். இதுதவிர நூறு திருநங்கைகளும் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் 89 சதவீத பெண்கள் போக்குவரத்துக்கு அரசு பேருந்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. இதில் 82 சதவீதம் பேர் அரசு வழங்கியிருக்கும் இலவச பேருந்து பயணத்தின் மூலம் பெருமளவு பணம் மிச்சப்படுவதாக மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். அதில் 42 சதவீதம் பெண்கள் பேருந்து பயணத்தின் போது சில துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களில் 35 சதவீதம் பெண்கள் கூறும்போது பேருந்தில் ஏறும் போதும், பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் போதும் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை சந்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

பஸ் பயணத்தின்போது பாலியல் தொந்தரவுக்கு உள்ளானவர்களில் 62 சதவீதம் பேர் துணிச்சலாக தட்டி கேட்டதாகவும் ஆனால் பொதுமக்கள் தரப்பில் ஒருவர் கூட உதவிக்கு முன் வரவில்லை என்றும் ஆதங்கப்பட்டனர். ஆனால் இது பற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, பெண்களுக்கான பாதுகாப்பு வசதிகள் என்னென்ன இருக்கிறது என்பது பற்றி 62% பெண்களுக்கு எதுவுமே தெரியவில்லை. 32 சதவீதம் பெண்களுக்கு மட்டுமே காவலன் செயலியை பற்றிய புரிதல் இருக்கிறது. 10 சதவீதம் பேர் பெண்களுக்கு உதவுவதற்கான பெண்கள் போலீஸ் ரோந்து வாகனத்தை பற்றி அறிந்திருக்கிறார்கள். 29 சதவீத பெண்கள் மாநகர பஸ்களில் அவசர உதவிக்கு வைக்கப்பட்டிருக்கும் பொத்தான் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டு மேயர் பிரியா கூறும்போது, ‘‘பஸ் பயணம் செய்யும் பெண்கள் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். உங்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொள்வதற்காகவே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு பரிந்துரைகள் செய்யப்படும் அடிக்கடி பஸ்களை இயக்க வேண்டும். பெண்களுக்காகவே பஸ்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவசரகால பொத்தான் பற்றிய விழிப்புணர்வை பெண் பயணிகளிடம் ஏற்படுத்த வேண்டும். மேலும் 10 சதவீத பெண்கள் இதே போல் பாலியல் ரீதியான தொந்தரவுகள் பஸ்களில் மட்டுமல்ல மெட்ரோ ரெயிலில் கூட நடப்பதாக தெரிவித்து உள்ளார்கள்’’ என்றார்.

சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூறும்போது, ‘‘நாட்டிலேயே பாதுகாப்பான நகரம் சென்னை என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் தான் அதிகமான பெண் போலீஸ் நிலையங்களும் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்கள் மூலம் பெண்களுக்கு பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்து உள்ளது. கவுன்சலிங்கும் கொடுக்கப்படுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதி என்று தெரியவரும் இடங்களில் கூடுதலான ரோந்து பணிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?