சார்ல்ஸ்டன்: அமெரிக்காவில் நடைபெறும் சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, உள்ளூர் நட்சத்திரம் ஜெஸிகா பெகுலா தகுதி பெற்றார். காலிறுதியில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா (34 வயது, 26வது ரேங்க்) உடன் மோதிய பெகுலா (30 வயது, 5வது ரேங்க்) 6-4, 3-6, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் போராடி வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 36 நிமிடங்களுக்கு நீண்டது. கிரீஸ் வீராங்கனை மரியா சாக்ரி (28 வயது, 7வது ரேங்க்) தனது காலிறுதியில் 6-2, 6-4 என நேர் செட்களில் ரஷ்யாவின் குதெர்மதோவாவை (26 வயது, 19வது ரேங்க்)வீழ்த்தினார். டேனியலி கோலின்ஸ் (அமெரிக்கா), டாரியா கசட்கினா (ரஷ்யா) ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர். அரையிறுதியில் பெகுலா – கசட்கினா, சாக்கரி – கோலின்ஸ் மோதுகின்றனர்.