ஜம்மு: ஜம்மு – காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் லாரி-பரிகம் என்ற பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்றிரவு முதல் துப்பாக்கிச் சண்டை நடந்தது. தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், ‘சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு தீவிரவாதிகளில் ஒருவன் லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதி, மற்றொரு தீவிரவாதியின் பின்புலம் குறித்து விசாரிக்கப்படுகிறது. இரண்டு தீவிரவாதிகளின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை’ என்றன. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் தெற்கு காஷ்மீரின் ஹலன் வனப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.