செங்கல்பட்டு: சென்னை சிட்லபாக்கத்தில் சந்திரசேகரன் என்பவர் தன் வீட்டிற்கு மின் இணைப்பு பெற மின்சார வாரிய அலுவலத்தில் அணுகியுள்ளார். அப்போது, புதிய மின் இனைப்பு வழங்க ரூ.25 ஆயிரம் வேண்டும் என உதவி மின் பொறியாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சந்திரசேகரன் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி அன்று மின் இணைப்பு வழங்க சந்திரசேகரனிடம், உதவி மின் பொறியாளர் சந்திரசேகர் ரூ.25 ஆயிரம் லஞ்சமாக வாங்கிய போது உதவி மின்பொறியாளர் சந்திரசேகரை சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வந்தனர். நேற்று செங்கல்பட்டு மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தநிலையில், வழக்கை விசாரித்த மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயஷ்டி குற்றவாளி சந்திரசேகருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.