புதுடெல்லி: ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகளுக்கு மாதம் ரூ.20,000 ஓய்வூதியம் போதுமா? என்று ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். அகில இந்திய நீதிபதிகள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது டிஒய் சந்திரசூட் கூறுகையில், ‘உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதித்துறையில் இருந்து பதவி உயர்வு பெற்ற நீதிபதிகள் சிலர், தங்களது ஜிபிஎப் கணக்குகளின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறி அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளனர். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகளின் ஓய்வூதியத் தொகை மிகவும் குறைவாக உள்ளது.
இவ்விசயத்தில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் ரூ. 19,000 முதல் ரூ.20,000 வரை ஓய்வூதியம் பெறுகிறார்கள். இந்த தொகையை வைத்துக் கொண்டு, அவர்கள் எப்படி வாழ்க்கையை ஓட்டுவது? எனவே இவ்விசயத்தில் சரியான தீர்வு கிடைக்க வேண்டும். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது’ என்று கூறினார். அப்போது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், இந்த விவகாரம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு பரிசீலிப்பதாக தெரிவித்தார்.