Friday, May 10, 2024
Home » ரூ,4 ஆயிரம் கோடி முதலீட்டில் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு தூத்துக்குடியில் மின் வாகன உற்பத்தி ஆலை: புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட 50 நாளில் அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ரூ,4 ஆயிரம் கோடி முதலீட்டில் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு தூத்துக்குடியில் மின் வாகன உற்பத்தி ஆலை: புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட 50 நாளில் அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Ranjith

தூத்துக்குடி: தூத்துக்குடியில் முதற்கட்டமாக ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வியட்நாமின் வின்பாஸ்ட் நிறுவன புதிய மின் வாகன உற்பத்தி ஆலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட 50 நாட்களுக்குள் இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா துரிதமாக நடந்துள்ளது ெபாதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

தமிழ்நாடு இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு தேவையான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கடந்த மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

மாநாட்டின் போது 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உறுதி செய்து கொள்ளும் வகையில், உலகளாவிய முன்னணி தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் முன்னெப்போதும் இல்லாத சாதனையாக 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கினை அடைவதற்கான தொலைநோக்கு ஆவணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள வியட்நாம் நாட்டின் வின் பாஸ்ட் நிறுவனமானது 7 வகையான மின் சீருந்துகளையும் (பேட்டரி), 5 வகையான மின் ஸ்கூட்டர்களையும் 7 வகையான மின் பேரூந்துகளையும் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ன் போது தமிழ்நாட்டின் மின் வாகன உற்பத்தியில் நீண்டகால முதலீடாக 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ,16 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஒப்பந்தம் மேற்ெகாள்ளப்பட்ட 50 நாளில் இந்நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் தொழிற்பூங்காவில் நடந்தது. இதில் பங்கேற்க சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று காலை தூத்துக்குடி வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கிருந்து தூத்துக்குடி சிப்காட்-சில்லாநத்தம் தொழிற்பூங்காவிற்கு கார் மூலம் சென்றடைந்தார். அங்கு வின்பாஸ்ட் ஆட்டோ நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தி ஆலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

இந்நிறுவனம் மூலம் தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் – சில்லாநத்தம் தொழிற்பூங்காவில் 16,000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தின் முதற்கட்டமாக ரூ,4 ஆயிரம் கோடி முதலீட்டில் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த ஆலை ஒருங்கிணைந்த மின்வாகன உற்பத்தி ஆலையாகவும், ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் வாகன உற்பத்தி திறன் கொண்டதாகவும் அமைய உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட 50 நாட்களுக்குள் இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா துரிதமாக நடந்துள்ளது பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் ஆட்டோ ஹப் மற்றும் இந்தியாவின் மின் வாகன தலைநகரமாக விளங்கும் தமிழ்நாட்டின் நிலையை மேலும் வலுப்படுத்தும். தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்வதற்கு மிகவும் உகந்த சூழமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதற்கும், தொழில் முனைவோருக்கு தேவையான அனைத்து ஆதரவு சேவைகளையும் விரைவாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதற்கும் இது மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இந்நிகழ்ச்சியில், சபாநாயகர் அப்பாவு, தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், மனோ தங்கராஜ், டிஆர்பி ராஜா, எம்எல்ஏக்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், வின்பாஸ்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் பாம் சான்ஹ் சௌ, துணை தலைமை செயல் அலுவலர்கள் ஹோங் காங் தாங், நுகென் டாங் குவாங் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.

* நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி எடுப்போருக்கு வேலைவாய்ப்பு
விழாவில் தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில் ‘‘நம் நாட்டில் வின்பாஸ்ட் நிறுவனத்தின் இந்த மாபெரும் தொடக்கம், தமிழ்நாட்டின் முற்போக்கான தொழில்துறை கொள்கைகளை மீண்டும் உறுதிப்பட எடுத்துரைக்கிறது. உலகளாவிய வாகன புதுமைக் கண்டுபிடிப்புச் சூழலுக்கும், உற்பத்திக்கும் தமிழ்நாட்டை மிகச்சிறந்த உற்பத்தி மையம் என மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் பங்கு அமைந்திருக்கிறது.

நாட்டில் வின்பாஸ்ட் நிறுவனம் விரும்பும் லட்சிய வளர்ச்சித் திட்டங்களுக்கு ஏற்ற இடமாக தமிழ்நாடு இருக்கும். மேலும் கார்பன் வெளியேற்றம் இல்லாத பூஜ்ஜிய உமிழ்வு போக்குவரத்தை எல்லோராலும் எளிதில் பெறக்கூடிய ஒன்றாக மாற்றுவதில் தமிழ்நாடு உறுதி பூண்டுள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார முன்னேற்றம் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்கு கணிசமான பங்களிப்பை வழங்கும். தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி எடுப்போர் வேலைவாய்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்’’ என்றார்.

* முதல் பேட்டரி கார்2025 ஜூனில் வெளிவரும்
வின்பாஸ்ட் பேட்டரி கார் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பாம் சான்ஹ் சௌ நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் மின்சார கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். தூத்துக்குடியின் இந்த ஆலையில் இருந்து முதலாவது மின்சார கார் 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் உற்பத்தியாகி இயக்கத்திற்காக வெளியே வரும். இந்த கார்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 முதல் 400 கிலோ மீட்டர் தொலைவு வரை செல்லும். இந்த கார்களுக்கான பேட்டரிகளை வீடுகளிலும், வெளியே உள்ள மையங்களிலும் சார்ஜ் செய்ய முடியும்.

இந்த ஆலையில் இருந்து உற்பத்தியாகும் கார்களை இந்தியாவில் விற்பனை செய்வதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளோம். முதல் கட்டமாக உற்பத்தி செய்யப்படும் கார்கள் இந்தியாவில் மட்டும் தான் விற்பனை செய்யப்படும். அதன் பிறகே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தூத்துக்குடி துறைமுகத்தில் சில சரக்கு கப்பல்கள் வந்து செல்லும் வசதிகள் தேவைப்படும். கார்கள் கொண்டு செல்லவேண்டும் என்றால் அங்கு பெரிய கப்பல்கள் வரும் அளவுக்கு வசதிகள் செய்ய வேண்டும். இதற்காக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

You may also like

Leave a Comment

4 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi