டெல்லி: உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கணக்கில் வராத வருமானம் மற்றும் சொத்துக்களின் தோராய மதிப்பை தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வழங்க இயலாது என்று ஒன்றிய நிதியமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள கணக்கில் வராத சொத்துக்கள் என்னென்ன என்பது குறித்தும் கணக்கில் வராத தோராய வருமானம் குறித்தும் தகவல் தேவை என தலெபனா கிருஷ்ணா என்பவர் கேட்டிருந்தார்.
தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கடந்த 2019ம் ஆண்டு இவர் எழுப்பிய கேள்விக்கு அப்போதைய ஆட்சியை தலைமை பொது தகவல் அலுவலர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்பது புகார் ஆகும். அதை தொடர்ந்து அவர் மத்திய தகவல் ஆணையத்திடம் முறையீடு செய்திருந்தார்.
இது தொடர்பாக தகவல் அளிக்க நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய பொது நிதி மற்றும் கொள்கைக்கான ஆராய்ச்சி மையம் மறுத்துவிட்டது. இந்த தகவல்களை வெளியிட்டால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று விளக்கமளித்துள்ளது. இது போன்ற தகவல்களை அளிப்பதில் விலக்கும் கூறியுள்ளது. வருவாய் துறைக்கும் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் இடையிலான ஆவண நகல்களை தனி நபர் கேட்பது முறையல்ல என்றும் இது மிக மிக முக்கியமான தகவலாகும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.