சென்னை: சென்னை தரமணி வேதியியல் தொழில் நுட்ப பயிலகத்தில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. வருகிற 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தொழில் நுட்ப கல்வித்துறையின் தரமணி வேதியியல் தொழில் நுட்பப் பயிலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை தரமணியில் உள்ள வேதியியல் தொழில் நுட்ப பயிலகம் 100% உத்திரவாதத்துடன் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பை தரக்கூடிய பட்டயப்படிப்பினை வழங்கி கொண்டிருக்கிறது. இந்த வேதியியல் தொழில் நுட்ப பயிலகத்தில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. டிப்ளமோ இன் கெமிக்கல் என்ஜினீயரிங் மற்றும் டிப்ளமோ இன் பாலிமர் டெக்னாலஜி ஆகிய இரண்டு பாடபிரிவில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி, மெட்ரிக்குலேசன், சிபிஎஸ்சி) தேர்ச்சி (அல்லது) அதற்கு இைணயான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக வரும் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போர் www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். பதிவுக் கட்டணம் ரூ.150. கட்டணத்தை விண்ணப்பதாரர் டெபிட்கார்ட், கிரிடிட் கார்ட், நெட் பேங்கிங்கில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் பதிவுக்கட்டணம் செலுத்த அவசியமில்லை. அட்மிஷன் சார்ந்த விவரங்களுக்கு ஜெ.ஜானகி முதல்வர் (முழு கூடுதல் பொறுப்பு), 9841824107 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.