Sunday, June 16, 2024
Home » புதுமை கண்டுபிடிப்புகளை உருவாக்க சென்னை ஐஐடி – டிடிகே கார்ப்பரேஷன் புதிய திட்டம்

புதுமை கண்டுபிடிப்புகளை உருவாக்க சென்னை ஐஐடி – டிடிகே கார்ப்பரேஷன் புதிய திட்டம்

by Mahaprabhu

சென்னை: மின்னணு தீர்வுகளில் முன்னணியில் உள்ள டிடிகே கார்ப்பரேஷன், சென்னை ஐஐடியில் உள்ள கோபாலகிருஷ்ணன் தேஷ்பாண்டே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மையத்துடன் இணைந்து ‘டிக் விரைவுபடுத்தும் திட்டம்-2024’ என்ற புதிய திட்டத்தை தொடங்குகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் உருவாகும் புதுமை கண்டுபிடிப்புகளை வளர்த்தெடுப்பதே இப் புதிய திட்டத்தின் நோக்கமாகும். இதுகுறித்து டிடிகே நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவரும், கார்ப்பரேட் மார்க்கெட்டிங் மற்றும் இன்குபேஷன் தலைமையகத்தின் பொதுமேலாளருமான மைக்கேல் போக்சாட்கோ கூறுகையில், “பொருளாதார மற்றும் சமூக ரீதியாக, புதுமை மற்றும் மாற்றத்திற்கான இலக்குகளை எட்டும் இந்தியாவின் லட்சியத்திற்கு பங்களிப்பை வழங்கும் எங்கள் நீண்டகால அர்ப்பணிப்பில் இந்த கூட்டாண்மை ஒரு முக்கியமான கூடுதல் படியாகும்” என்றார்.

சென்னை ஐஐடி பேராசிரியரும், கோபாலகிருஷ்ணன்-தேஷ்பாண்டே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மையத்தின் ஆசிரியப் பொறுப்பாளருமான கிருஷ்ணன் பாலசுப்ரமணியன் கூறும்போது, “இதன் மூலம் சுகாதார தொழில்நுட்பத்தில் புதுமையான ஸ்டார்ட்அப்களை ஆதரிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. டிடிகே நிறுவனத்தின் தொழில்துறை அனுபவத்துடன் எங்களது தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தொழில்துறை மேம்பாட்டு ஆதரவும் ஒன்றிணைவதன் மூலம் சுகாதாரத் துறையில் அதிநவீனத் தீர்வுகளை ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் சந்தைக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம்” என்றார். இதுகுறித்து வெளியிட்டப்பட்ட விவரம்: இந்தியாவின் மிகச்சிறந்த திறமை, படைப்பாற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்தி சுகாதாரம் மற்றும் நோய் கண்டறிதல் துறைகளை ஊக்குவிப்பதும், மருத்துவ சாதனங்களை உருவாக்குவதும் இக்கூட்டு முயற்சியின் இலக்குகளாகும்.

சுகாதார தொழில்நுட்ப முயற்சிகளில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டத்தின் மூலமாக உதவி செய்தல், வழிகாட்டுதல், கூட்டு சேர்தல், முதலீடு வாய்ப்புகள் ஆகியவை மேற்கொள்ளப்படும். சுகாதார தொழில்நுட்பம் மற்றும் நோய்கண்டறிதல் துறையில் பின்வரும் பிரிவுகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பங்கேற்பை இத்திட்டம் வரவேற்கிறது. நோய் கண்டறிதல் ஆய்வகங்கள், சேவைகள், நோய் கண்டறியும் சாதனங்கள்- இமேஜிங் சாதனங்கள், சிகிச்சை சாதனங்கள், உணர்திறன் சாதனங்கள், பதிவிடும் சாதனங்கள், அறுவை சிகிச்சை சாதனங்கள் (இம்பிளாண்ட்டுகள் தவிர) நுகர்பொருட்கள் மருத்துவ நோய்அறிதல் மற்றும் உபகரணங்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான சேவைகள், பகுப்பாய்வு மேற்கண்டவை சார்ந்த தொழில்நுட்பங்கள்- சென்சார்கள், ஐஓடி, 5ஜி, 3டி பிரிண்டிங், ஏஐ/எம்எல், மேம்படுத்தப்பட்ட பொருட்கள், ஜெனரேட்டிவ் ஏஐ, டெலிமெடிசின், ரோபாட்டிக்ஸ், ஏஆர்/விஆர் முதலியவை நியூரோ எலக்ட்ரானிக் திட்டம் ஜூன் 2024ல் தொடங்க இருப்பதையொட்டி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மிகவும் நம்பிக்கைக்குரிய ஸ்டார்ட்அப்கள், குழுக்கள் மட்டும் தேர்வு செய்யப்படும். அதனைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்அப்கள், குழுக்களுக்கு சென்னை ஐஐடி வளாகத்தில் ஜிடிசி நேரடியாக பயிற்சி அளிக்கும். 6 முதல் 8 வார கால தீவிர தொடக்க முகாமில் வாடிக்கையாளர்களைக் கண்டறிவதில் கவனம் செலுத்தப்படும். அடுத்தக் கட்டத்தில், பட்டியலிடப்பட்ட குழுக்களின் தொகுப்பு வணிக வழிகாட்டல் திட்டத்தில் பங்கேற்கும். முதலீட்டிற்குத் தயாராக இருக்கவும், முதலீடுகளைப் பாதுகாக்கவும், பிற சாத்தியமான ஒத்துழைப்புகளை ஆராயவும் டிடிகே-க்கு அவர்களைத் தயார்படுத்தவும் உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

three + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi