சென்னை: விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நந்தனம், சி.எம்.ஆர்.எல் வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சென்னை புத்தொழில் மைய அலுவலகத்தை திறந்து வைத்தார். நந்தனம், சி.எம்.ஆர்.எல் வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சென்னை புத்தொழில் மைய அலுவலகத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நிகழ்விற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.
புத்தொழில் நிறுவனங்களுக்கு பயிற்சிகள் வழங்க பயிற்சி அரங்கம், கலந்துரையாடல் அரங்கங்கள், தொலைபேசி சேவை மையம், துணிகர முதலீட்டாளர்கள் புத்தொழில் நிறுவனங்களை சந்திக்க அறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிமாவட்டத்தில் செயல்படும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், சென்னைக்கு வரும்போது பணிபுரிய இடம் வழங்குவதற்கான வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் செயல்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,300, தற்போது டிபிஐஐடியில் பதிவு பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7,950 ஆகும். ஸ்டார்ட்அப் டிஎன் கொள்கைக்குறிப்பில் 2032ம் ஆண்டுக்குள் 15,000 ஸ்டார்ட்அப்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச அளவில் சிறந்த ஸ்டார்ட்அப் சூழமைவு கொண்ட 20 இடங்களில் தமிழ்நாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் இயக்க இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் ஆகியோரும் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.