சியாட்டில்: அமெரிக்காவில் சாலை விபத்தில் உயிரிழந்த இந்திய மாணவியின் பட்டம் அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்படும் என பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தென்மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜானவி கண்டூலா(23). இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சியாட்டில் நகரில் உள்ள வடகிழக்கு பல்கலைக் கழகத்தில் தகவல் அமைப்புகள் தொடர்பாக முதுகலை கல்வி பயின்று வந்தார். இவர் படித்துக் கொண்டே பகுதிநேர வேலையும் செய்து வந்துள்ளார்.
கடந்த ஜனவரி 23ம் தேதி சியாட்டில் நகரில் ஜானவி கண்டூலா சாலையை கடக்க முயன்றார். அப்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற போக்குவரத்து போலீஸ் கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜானவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த ஜானவி கண்டூலாவுக்கு, அவரது குடும்பத்தினரிடம் பட்டம் வழங்கப்படும் என வடகிழக்கு பல்கலைக் கழகத்தின் வேந்தர் கென்னத் டபிள்யூ ஹென்டர்சன் தெரிவித்துள்ளார்.
* அதிகாரி மீது கடும் நடவடிக்கை
விபத்தை ஏற்படுத்திய காவல்துறை அதிகாரி டேனியல், மாணவி குறித்தும், விபத்து குறித்தும் கேலியாக பேசி சிரிக்கும் ஆடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. அதிகாரி டேனியல் தண்டிக்கப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். காவல் அதிகாரியின் பேச்சுக்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜானவி உயிரிழப்பு குறித்து விரைவாக விசாரணை நடத்தி, விபத்தை ஏற்படுத்திய காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.