சாண்டியகோ: எப்ஐஎச் இளையோர் மகளிர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டி சிலியின் சாண்டியகோ நகரில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டத்தில் சி பிரிவில் உள்ள இந்திய அணி தனது, முதல் ஆட்டத்தில் கனடா அணியை எதிர்கொண்டது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை முடிந்த இந்த ஆட்டத்தில் பிரீத்தி தலைமையிலான இந்திய மகளிர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். அதன் பலனாக இந்திய அணியின் அன்னுராணி ஆட்டம் தொடங்கிய 4, 6வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோலடித்து அசத்தினார்.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியின் மோனிகா 21, மும்தாஜ் கான் 26நிமிடங்களில் கோலடிக்க இந்திய முதல் பாதியில் 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்த 2வது பாதியில் இந்திய வீராங்கனைகளை சமாளிக்க முடியாமல் கனட வீராங்கனைகள் திணறினர். அதனால் இந்தியாவின் கோல் மழை தொடர்ந்தது. தீபிகா 34வது நிமிடத்திலும், அன்னுராணி 39வது நிமிடத்தில் தனது 3வது கோலையும் அடிக்க இந்தியாவின் முன்னிலை வலுவானது.
ஆனாலும் இந்திய வீராங்கனைகளின் கோல் தாகம் தீரவில்லை. நீலம் 45வது நிமிடத்திலும், தீபிகா 41, 54, 60 நிமிடங்களிலும், தீபிகா 50, 54வது நிமிடங்களிலும் அடுத்தடுத்து கோலடித்து அசத்தினார். அதனால் ஆட்ட நேர முடிவில் இந்திய மகளிர் 12-0 என்ற கோல் கணக்கில் கனடாவின் கதையை முடித்து, முதல் வெற்றியை பதிவு செய்தனர். இந்திய தரப்பில் மும்தாஜ் 4, அன்னு, தீபிகா தலா 3 , மோனிகா, நீலம் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் 19வயதுக்குட்பட்ட இளைய மகளிரை கனடா மகளிர் இதுவரை வென்றதில்லை என்ற வரலாறு தொடர்கிறது.