ராமநாதபுரம் : இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என ஏமாற்றிய மாற்றுத் திறனாளி வினோத் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கீழச்செல்வனூரை சேர்ந்த வினோத் பாபு மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.மாற்றுத் திறனாளி வினோத் பாபு இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என கூறி வலம் வந்துள்ளார்.உலகக்கோப்பை கிரிக்கெட் விளையாட பாகிஸ்தான் செல்ல உள்ளதாக கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார். லண்டனில் மார்ச் 26ம் தேதி தனது அணி பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றதாகவும் கூறியுள்ளார் வினோத் பாபு.
கடையில் வாங்கிய கோப்பை போட்டியில் வென்றதாக கூறி ராமநாதபுரம் ஆட்சியர், அமைச்சர்கள் என முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாழ்த்தும் பெற்றுள்ளார் வினோத் பாபு. இந்த நிலையில், வினோத் பாபுவால் ஏமாற்றப்பட்ட பலர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி,யிடம் புகார் அளித்தனர். இதையடுத்து பேக்கரி உரிமையாளரிடம் ரூ.1 லட்சம் பெற்று ஏமாற்றிய புகாரில் ராமநாதபுரம் குற்றவியல் போலீசார் வினோத் பாபு மீது 406, 420 ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வினோத் பாபுவின் இந்த நூதன மோசடி தமிழகம் முழுவதும் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.