நெல்லை: சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு பட்டியலில் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கேன்சர் மையத்தில் ரூ.12 கோடியில் பெட் ஸ்கேன் சென்டர் திறப்புவிழா மற்றும் ரூ.23 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் அதிதீவிர சிகிச்சை மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை வகித்தார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெட் ஸ்கேன் இயந்திரத்தை திறந்து வைத்து பேசியதாவது: மதுரைக்கு அடுத்தபடியாக கேன்சர் நோயை கண்டறியும் பெட் ஸ்கேன் சென்டர் நெல்லையில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்கள் பயனடைவார்கள். இதற்கு கட்டணமாக ரூ.11 ஆயிரம் வசூலிக்கப்படும். முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக ஸ்கேன் எடுக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு கேட்டு கொண்டதின் பேரில் அதுகுறித்து பரீசிலிக்கப்படும். இந்தியா முழுவதும் 680 அரசு, மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இதில் 171 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் செயல்பாடு மற்றும் தரவுகளை ஆய்வு செய்தது தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் மாநில அரசுகளின் மருத்துவமனைகளில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதலிடம் பிடித்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.