டெல்லி: இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக தமிழக வீரர் குகேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழக வீரர் குகேஷ் 2,758 புள்ளிகளுடன் சர்வதேச அளவில் 8வது இடத்திற்கு முன்னேறினார். முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 2754 புள்ளிகளுடன் சர்வதேச பட்டியலில் 9வது இடத்தில் உள்ளார். 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரான விஸ்வநாதன் ஆனந்த் 1986க்கு பிறகு 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் 1 வீரராக இருந்து வருகிறார். இதன் மூலம் செஸ் தரவரிசையில் 37 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆனந்தின் சாதனை பயணம் முடிவுக்கு வந்தது.
சர்வதேச தரிவரிசை பட்டியலில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா 19வது இடத்தில் உள்ளார். குகேஷுக்கு விஸ்வநாதன் ஆனந்த் தான் ரோல் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 17 வயதான குகேஷ் சென்னையை சேர்ந்தவர். இந்திய கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவர். கடந்த 2019-ல் இந்த கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை அவர் பெற்றார். 16 வயதில் உலக சாம்பியனை வீழ்த்தி சாதனை படைத்தார். மிக இளம் வயதில் 2750 லைவ் ரேட்டிங்கை எட்டிய வீரர் என்ற சாதனையை அண்மையில் படைத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.