மாஸ்கோ : இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்திற்கு போட்டியாக நிலவை ஆராயும் வகையில் ரஷ்யாவின் லூனா 25 விண்ணில் ஏவப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் முனைப்பு காட்டி வரும் நிலையில், இந்தியா சார்பில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் அதன் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது. சந்திரயான் 3 விண்கலம் ஆகஸ்ட் 23ல் நிலவில் தரை இறங்க உள்ளது. இந்த நிலையில், அதே தென் துருவத்தில் விண்கலத்தை மெதுவாக தரையிறங்கி நிலவில் தண்ணீர் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக ரஷ்யா லூனா 25 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியுள்ளது. சோயூஸ் 2.1வி என்ற ராக்கெட் மூலம் அந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய நேரப்படி அதிகாலை 4.40க்கு ஏவப்பட்ட லூனா 25, 7 நாட்களில் நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கும். 1,800 கிலோ எடை கொண்ட லூனா 25 செயற்கைகோள் நிலவின் மேற்பரப்பில் பனிக்கட்டிகள், கனிமங்கள், எரிபொருள் ஆக்சிஜன், குடிநீர் போன்றவற்றை ஆய்வு செய்யும். சந்திரயான் 3 நிலவில் தரையிறக்கப்படுவதற்கு முன்பே லூனா 25வை நிலவில் தரையிறக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவின் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கும் முயற்சியை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. சர்வதேச அரங்கில் இது இந்தியா – ரஷ்யா இடையிலான போட்டியாக பார்க்கப்படுகிறது.