டெல்லி : இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் என அசாம் மாநில பாஜக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா தெரிவித்துள்ளார். 2024 மக்களவை தேர்தலில் பா.ஜவை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து முதலில் பீகார் தலைநகர் பாட்னாவிலும், அடுத்தது கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும் ஆலோசனை நடத்தி உள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு போட்டியாக முதன்முறையாக பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது.2019 மக்களவை தேர்தலில் பா.ஜ தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 38 கட்சிகள் பங்கேற்றன.
முன்னதாக 26 கட்சிகள் இணைந்துள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியான(என்டிஏ) கூட்டணிக்கு எதிராக நாட்டை வளமான பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் இந்தியா (இந்தியன் நேஷனல் டெவலப்மென்ட்டல் இன்க்ளூசிவ் அலையன்ஸ்) என்ற பெயரில் கூட்டணி பெயர் சூட்டுவதற்கு கட்சி தலைவர்கள் அனைவரும் ஒருமனதாக ஒப்புதல் வழங்கினர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியை விமர்சித்து அசாம் மாநில பாஜக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா ட்வீட் செய்துள்ளார்.அவரது ட்விட்டர் பதிவில், ”நமது நாகரிக மோதல்கள் இந்தியாவையும் பாரதத்தையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு இந்தியா என்று பெயரிட்டனர். காலனித்துவ மரபுகளில் இருந்து விடுபட நாம் பாடுபட வேண்டும். நமது முன்னோர்கள் பாரதத்திற்காக போராடினார்கள், நாம் தொடர்ந்து பாரதத்திற்காக உழைப்போம்” என பதிவிட்டுள்ளார்.மேலும் ட்விட்டர் பயோவில் ‘இந்தியா’-வை ‘பாரத்’ என மாற்றிய அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா; பிரதமர் மோடி NDA-வுக்கு கொடுத்த விளக்கத்தில் New India எனக் கூறியதையும் பகிர்ந்துள்ளார்