புதுடெல்லி: சிறுத்தைகள் கணக்கெடுப்பு பணியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்படுகிறது. அந்த வகையில் சமீபத்திய கணக்கெடுப்பின் அறிக்கையை ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று வெளியிட்டார்.நாட்டின் 18 மாநிலங்களில் அமைந்துள்ள 4 முக்கிய வன பகுதிகளை மையமாக கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
6,41,449 கி.மீ. நீள தொலைவுக்கு 32,803 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கேமரா பொறிகள் மூலம் எடுக்கப்பட்ட 85,488 சிறுத்தைகள் புகைப்படங்களை கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு 12,852 ஆக இருந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு 13,874 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, மத்திய பிரதேசத்தில் 3,907 சிறுத்தைகள் உள்ளன. மகாராஷ்டிராவில் 1,985 சிறுத்தைகளும், கர்நாடகாவில் 1,879 சிறுத்தைகளும், தமிழ்நாட்டில் 1,070 சிறுத்தைகளும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அறிக்கையின்படி இந்தியாவில் 12 ஆயிரத்து 852 சிறுத்தைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.