பீஜிங்: இந்தியா-சீனா இடையேயான உறவு இருநாடுகளுக்கும் பயன் அளிக்கும் என்று சீன வெளியுறவு துறை அதிகாரி தெரிவித்தார். அமெரிக்காவின் நியூஸ்வீக் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள மோடி,சீன விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். சீன விவகாரம் குறித்து கூறுகையில்,‘‘இந்தியாவை பொறுத்தவரை சீனாவுடனான உறவு முக்கியமானது ’’ என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மோடியின் கருத்தை சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் வரவேற்றுள்ளார். மோடியின் கருத்து பற்றி அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு,‘‘ இந்தியா-சீனா இடையே வலுவான மற்றும் நிலையான உறவு இரு நாடுகளின் பொதுவான நலன்களுக்கு மிகுந்த பயன் அளிப்பதோடு, பிராந்தியத்திற்கு அப்பால் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் என நம்புகிறேன். எல்லை பிரச்னை என்பது இந்தியா-சீன உறவில் முழுமையானதாக பிரதிபலிக்காது. இரு தரப்பு உறவில் அதை முறையாக வைத்து நிர்வகிக்கப்பட வேண்டும்.
இரு தரப்பினரும்,ராஜதந்திரம் மற்றும் ராணுவம் வழியாக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனர். சீனாவை போன்ற வழியை பின்பற்றி இரு தரப்பு உறவுகளில் நீண்ட கால திட்டத்துடனும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையிலும் இந்தியா பணியாற்ற வேண்டும். மேலும் இரு தரப்பிலும் இடையே ஏற்படும் வேற்றுமைகளை முறையாக களையும் வகையில் செயல்பட்டு இரு நாடுகள் இடையேயான உறவை முன்னோக்கி எடுத்து செல்ல பாடுபட வேண்டும்’’ என்றார்.