வருசநாடு: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், வருசநாடு அருகே உப்புத்துரை யானைகெஜம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டம், வருசநாடு அருகே உப்புத்துரை யானைகெஜம் அருவி உள்ளது. இதன் சுற்றுப்பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் உள்ளன. இவற்றில் இலவமரம், கொட்டைமுந்திரி, பீன்ஸ், அவரை, தக்காளி, கத்தரி, மாதுளை, எலுமிச்சை, பூசணி, நெல்லி, வாழை உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் நடவு செய்துள்ளனர். ஏராளமான தென்னந்தோப்புகளும் உள்ளன.
தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், யானைகெஜம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், ‘‘இப்பகுதியில் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர அருவி பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும். இதன் மூலம் இப்பகுதியில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விளைநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.