புதுடெல்லி: வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு பதிலளிக்காவிட்டால் முழுமையான விசாரணை நடத்த மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஒருவரது வருமானத்தில் வேறுபாடுகள் இருப்பதை கண்டுபிடித்தால் சம்பந்தப்பட்டவருக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அளிக்கும். வருமான வரி சட்டத்தின் 143(2)வது பிரிவின் கீழ் அனுப்பப்படும் இந்த நோட்டீசுக்கு தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து பதிலளிக்க வேண்டும். ஆனால், பலர் இந்த நோட்டீசுக்கு பதிலளிப்பது இல்லை. இப்படிபட்டவர்களுக்கு இனிமேல் சிக்கல்தான். நோட்டீசுக்கு பதிலளிக்காதவர்களின் வருமான கணக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அவர்களை பற்றிய விவரங்கள் தேசிய முகமில்லா வரி மதிப்பீட்டு மையத்திற்கு அனுப்பி மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், விசாரணை அமைப்புகளிடம் இருந்து வரும் வரி ஏய்ப்பு தொடர்பான தகவல்களை ஆராய்ந்து விசாரணை நடத்தவும் வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.