மீனம்பாக்கம்: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6.55 மணிக்கு, டெல்லி செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 174 பேருடன் புறப்பட தயாரானது. ஓடுபாதையில் விமானத்தை ஓட்ட தொடங்குவதற்கு முன்பு விமானத்தின் இயந்திரங்களை விமானி சரிபார்த்தார். இயந்திர கோளாறு இருப்பது தெரியவந்தது. உடனே விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பொறியாளர்கள் குழுவினர் விரைந்து வந்து, விமானத்துக்குள் ஏறி தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் காலை 8.10 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இயந்திர கோளாறு சரி செய்ய தாதமாவது தெரியவந்ததால் பயணிகள் விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். சில மணி நேரங்களுக்கு பிறகு பழுது பார்க்கும் பணி முடிவடைந்து விமானம் புறப்பட்டது. இயந்திர கோளாறை தகுந்த நேரத்தில் விமானி கண்டுபிடித்ததால் 174 பேர் தப்பினர்.