Wednesday, May 22, 2024
Home » போரூர் கொலை வழக்கில் திருப்பம் யார் பெரிய தாதா என்ற போட்டியில் பிரபல ரவுடியை கொன்றது அம்பலம்: கொலையாளிகளை பிடிக்க தனிப்படை

போரூர் கொலை வழக்கில் திருப்பம் யார் பெரிய தாதா என்ற போட்டியில் பிரபல ரவுடியை கொன்றது அம்பலம்: கொலையாளிகளை பிடிக்க தனிப்படை

by Dhanush Kumar

பூந்தமல்லி : போரூர் அருகே, படுகொலை செய்யப்பட்டவர் பிரபல ரவுடி வினோத் என்பதும், முன்விரோத தகராறால் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது. போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், சுப்பிரமணியம் நகர், பொன்னியம்மன் கோயில் தெருவில் நேற்று முன்தினம் இரவு பைக்கில் ஒரு வாலிபர் வந்துள்ளார். அப்போது 2 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டியது. அந்த வாலிபர் உயிருக்குப் பயந்து அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்தார். அவரை விடாமல் விரட்டிச் சென்ற அக்கும்பல், வீட்டின் கதவை உடைத்து, அவரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடியது.

தகவலறிந்த போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்டவர் மாங்காடு அடுத்த பெரியபணிச்சேரி பகுதியை சேர்ந்த வினோத் (27) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவரது தாயை அழைத்து வந்து அடையாளம் காணப்பட்டதில் கொலை செய்யப்பட்ட நபர் ரவுடி வினோத் என உறுதியானது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘கொலை செய்யப்பட்ட ரவுடி வினோத்தின் தாய் அய்யப்பன்தாங்கலில் இருப்பதால், அவரை பார்ப்பதற்காக வினோத் வந்துள்ளார். அப்போது வழிமறித்து அவரை கொலை செய்துள்ளனர். வினோத் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் திருடியதில் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வினோத்தின் தம்பியை மாங்காட்டில் எதிர்கோஷ்டியான அஜீத் தரப்பினர் வெட்டி படுகொலை செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த வினோத், தம்பியின் கொலைக்கு பழி வாங்குவதற்காக கடந்த ஆண்டு நாட்டு வெடிகுண்டுகளை வைத்துக்கொண்டு சென்றபோது பரணிபுத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டு தவறி கீழே விழுந்து வெடித்து சிதறியதில் வினோத் காயமடைந்தார். அதன்பிறகு, மாங்காடு போலீசார் வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்தவர் கோயம்புத்தூரில் சென்று தலைமறைவாக இருந்துள்ளார்.

தற்போது தம்பியின் கொலைக்கு பழிவாங்குவதற்காக அஜீத் தரப்பினரை கொலை செய்ய தீவிரம் காட்டி வந்த நிலையில், அதனை அறிந்து கொண்ட அஜீத் தரப்பினர் முந்திக் கொண்டு வினோத்தை கொலை செய்திருப்பது தெரியவந்தது. ஏரியாவில் யார் பெரிய தாதாவாக வலம் வருவது என்ற போட்டியில் இந்த கொலை நடந்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள அஜீத் தரப்பினரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம்,’’ என்றனர்.

You may also like

Leave a Comment

10 + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi