Thursday, May 9, 2024
Home » சட்டவிரோதமாக அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியதாக தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர், கொரியர் நிறுவனத்தில் ரெய்டு: 12 இடங்களில் நடந்தது; அமலாக்கத்துறை அதிரடி

சட்டவிரோதமாக அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியதாக தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர், கொரியர் நிறுவனத்தில் ரெய்டு: 12 இடங்களில் நடந்தது; அமலாக்கத்துறை அதிரடி

by Karthik Yash

சென்னை:தேசிய நெடுஞ்சாலைகளில் பெயின்ட் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் ஒப்பந்ததாரராக சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாய் சுக்கிரன் என்ற தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக சென்னை தி.நகர் பசுல்லா சாலையில் வசித்து வரும் தொழிலதிபர் நரேஷ் உள்ளார். இவர் வெளிநாடுகளில் இருந்து நெடுஞ்சாலைகளில் ஒட்டும் விலை உயர்ந்த ஸ்டிக்கர்களை இறக்குமதி செய்ததில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்து இருப்பதாகவும், அரசில் கட்சிகளுக்கு நிதி வழங்கி இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், தொழிலதிபர்கள் பலர் அரசியல் கட்சிகளுக்கு சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து ஒப்பந்ததாரர் மற்றும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரர் நடத்தும் தனியார் கொரியர் நிறுவனம் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகள், அலுவலகங்கள் என சென்னை முழுவதும் 12 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

குறிப்பாக, சென்னை தி.நகர் பசுல்லா சாலையில் வசித்து வரும் தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் நரேஷ் வீடு, தேனாம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகம், அதேபோல் பிரபல அரசியல் கட்சிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர், கிழக்கு கடற்கரை சாலை, அம்பத்தூர் ஆகிய இடங்களில் உள்ள தொழிலதிபர்களின் வீடு, அலுவலகங்களிலும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபால், தி.நகர் தெற்கு போக் சாலையில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் கேஷவ் என்பவரின் வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். ஆனால் அவர் வீடு பூட்டப்பட்டிருந்ததால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

மேலும், தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரர் சென்னை பல்லாவரம் நரிக்குறவர் காலனி குடியிருப்பு அருகே பிரபல கொரியர் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 8 மணிக்கு 6 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ வீரர்களுடன் வந்து கொரியர் நிறுவனத்தில் இருந்து வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பார்சல்களையும் சோதனை செய்தனர். அதன் கிளை நிறுவனங்களிலும் சோதனை நடந்தது. இரவு வரை நீடித்த சோதனையில் வெளிமாநிலங்களுக்கு சென்ற பார்சல்கள் விவரங்கள் மற்றும் வரவு செலவு கணக்குகள் குறித்த ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

You may also like

Leave a Comment

4 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi