Wednesday, May 15, 2024
Home » இளையராஜாவின் மகள் பவதாரிணி திடீர் மரணம்

இளையராஜாவின் மகள் பவதாரிணி திடீர் மரணம்

by Francis

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் ஒரே மகளான பவதாரிணி புற்றுநோய் பாதிப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47. இசையமைப்பாளர் இளையராஜா-ஜீவா தம்பதிகளுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என இரண்டு மகன்கள் உள்ளனர். பவதாரிணி என்ற ஒரு மகளும் இருந்தார். மகன்கள் இருவரையும் போலவே பவதாரிணியும், இசை அமைப்பாளராகவும், பாடகியாவும் இருந்து வந்தார். சபரீசன் என்ற தொழிலதிபரை மணந்து கொண்ட பவதாரிணிக்கு குழந்தைகள் இல்லை. கடந்த சில வருடங்களாகவே உடல்நல பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்தார் பவதாரிணி. சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டது. கல்லீரலில் கல் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் உடல்நலம் மோசமடையவே ஆயுர்வேத சிகிச்சை அளிக்க இலங்கை அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் அங்கு கொண்டு செல்லப்பட்ட சில நாட்களிலேயே அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பதும், அதுவும் 4வது கட்டத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை அவர் மரணம் அடைந்தார். தங்கையை கவனித்துக் கொள்ள யுவன் சங்கர் ராஜாவும், இசை நிகழ்ச்சி நடத்த இளையராஜாவும் இலங்கையில்தான் உள்ளனர். நாளை பவதாரிணியின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் நடக்க இருக்கிறது. பவதாரிணியின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

பவதாரிணி 1984ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ராசய்யா, அலெக்சாண்டர், தேடினேன் வந்தது, காதலுக்கு மரியாதை, அழகி, பிரண்ட்ஸ், தாமிரபரணி, உளியின் ஓசை, கோவா, மங்காத்தா, அனேகன் உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார். 2000மாவது ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் இடம்பெற்ற ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்காக சிறந்த பாடகிக்கான தேசிய விருது பெற்றார். 2002ம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ஆங்கில படமான ‘மித்ர் மை பிரண்ட்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். தொடர்ந்து, ‘பிர் மிலேங்கே’ என்ற இந்தி படத்திற்கு இசை அமைத்தார். ‘அவுனா’ என்ற தெலுங்கு படத்திற்கு இசை அமைத்தார். தமிழில் அமிர்தம், இலக்கணம், மாயநதி, கள்வர்கள், வெள்ளச்சி, போரிட பழகு உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தற்போது இரண்டு புதிய படங்களுக்கு இசை அமைக்க ஒப்பந்தமாகி இருந்தார். திரைப்படங்கள் தவிர ஏராளமான இசை ஆல்பங்களில் பாடி உள்ளார். ஆல்பங்களுக்கு இசை அமைத்தும் உள்ளார்.

 

You may also like

Leave a Comment

14 − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi