சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களை காவல் துறையினர் தாக்கியதாகவும், அந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க குழு அமைக்கும்படி உத்தரவிடக் கோரியும் டிட்டி மேத்யூ என்ற மாணவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு, மாணவர்கள் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக ஐ.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, இந்த சம்பவம் தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையில் உள்ளது என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், மாணவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.