Tuesday, May 14, 2024
Home » ஜல் ஜீவன் திட்டத்தில் டெண்டர் அதிகாரம் கோரி வழக்கு; ஊராட்சி தலைவர்களை ரப்பர் ஸ்டாம்ப் நிலைக்கு மாற்ற முடியாது: ஐகோர்ட் மதுரை கிளை கருத்து

ஜல் ஜீவன் திட்டத்தில் டெண்டர் அதிகாரம் கோரி வழக்கு; ஊராட்சி தலைவர்களை ரப்பர் ஸ்டாம்ப் நிலைக்கு மாற்ற முடியாது: ஐகோர்ட் மதுரை கிளை கருத்து

by Neethimaan

மதுரை: ஜல் ஜீவன் திட்டம் தொடர்பான வழக்கில் கிராம ஊராட்சி தலைவர்களை ரப்பர் ஸ்டாம்ப்களின் நிலைக்கு மாற்ற முடியாது என்று ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு அனைத்து கிராம ஊராட்சித் தலைவர்கள் நலச்சங்க தலைவர் எஸ்.எம்.முனியாண்டி தாக்கல் செய்த மனு: கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழியே சுத்தமான குடிநீர் வசதி அளிக்கும் ஜல்ஜீவன் திட்டத்தை, ஒன்றிய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சகம் 2019, ஆக.15ல் நடைமுறைபடுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், கிராம ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க, டெண்டர்களை விடும் அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு(பிடிஓ) வழங்கி செப்.15ம் தேதி மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு சட்ட விரோதம். டெண்டர் அழைப்பு விடுக்கும் அதிகாரத்தை பஞ்சாயத்து தலைவருக்கு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜிஆர் சுவாமி நாதன் முன் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, ‘‘ஒவ்வொரு குடிமகனுக்கும், குடியிருப்புக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதை சிறப்பாக செயல்படுத்தவே இந்த திட்டத்தை நோடல் அமைப்பு மூலம் வட்டார அளவில் செயல்படுத்துகிறோம். ஏற்கனவே இது போன்ற ஒரு வழக்கில் நீதிபதி, மாவட்ட கலெக்டரின் அறிவிப்பு செல்லும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் ஒரு சங்கத்தின் சார்பில் இதுபோன்ற வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற விதியும் உள்ளது.

எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று வாதிட்டார். மனுதாரர் வழக்கறிஞர் கூறுகையில், ‘‘பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் முக்கியமான நோக்கமே கிராம ஊராட்சிகளுக்கு நேரடியாக அதிகாரம் வழங்குவது தான். எனவே கலெக்டரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களுக்கும் குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1994ன் கீழ் குடிநீர் தொடர்பான பணிகளை, உள்ளாட்சி அமைப்பு தான் மேற்கொள்ள வேண்டும்..

எனவே பஞ்சாயத்து தலைவர்களை புறக்கணிக்க முடியாது. கிராம ஊராட்சி தலைவர்களை ரப்பர் ஸ்டாம்ப்களின் நிலைக்கு மாற்ற முடியாது. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசின் நிதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. தேசத்தந்தை மகாத்மா காந்தி கிராம சுயராஜ்யம் வேண்டும் என கனவு கண்டார். ஜே.சி.குமாரப்பாவை மறந்துவிட்டோம். இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, இந்த வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன் பட்டியலிட உத்தரவிடுகிறேன்.  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

eleven + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi