சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் 2844 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 132 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். இந்தாண்டுக்கான சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1105 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 1ம் தேதி வெளியிடப்பட்டது. முதல்நிலை தேர்ச்சி பெற்றோருக்கான மெயின் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 15, 16, 17, 23 மற்றும் 24ம் தேதி என 5 நாட்கள் நடந்தது. இந்த நிலையில் மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.inல் நேற்று மாலை வெளியிட்டது.
இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் இந்தியா முழுவதும் இருந்து 2,844 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 132 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 92 மாணவர்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்றவர்கள். ஒட்டுமொத்தமாக சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் (சென்னை,பெங்களுர், திருவனந்தபுரம் ) 504 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும். நேர்முக தேர்வு தேதியை யுபிஎஸ்சி பின்னர் அறிவிக்கும். மெயின் தேர்வில் தேர்ச்சி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேர்முக தேர்வு பயிற்சி சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் இலவசமாக அளிக்கப்படுகிறது.
இதில் பங்குபெற ஆர்வம் உள்ள மாணவர்கள் interview@shankarias.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். நேர்முக தேர்வு முடிந்த பின்னர் நேர்முக தேர்வு, மெயின் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி ஒதுக்கப்படும்.அதன் பின்னர் டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன பயிற்சி மையத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதை தொடர்ந்து அவர்கள் பணியில் சேர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.