Tuesday, May 21, 2024
Home » கணவரை பிரிந்து வேறொருவருடன் `பழக்கம்’ தலை துண்டித்து மகளை கொன்ற தந்தை: பாளையில் பயங்கரம்

கணவரை பிரிந்து வேறொருவருடன் `பழக்கம்’ தலை துண்டித்து மகளை கொன்ற தந்தை: பாளையில் பயங்கரம்

by MuthuKumar

நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகரை சேர்ந்தவர் மாரியப்பன் (56). இவர் அப்பகுதியில் சாலையோரத்தில் இளநீர் விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இவரது மகள் முத்துபேச்சிக்கும் (36), மேலப்பாட்டம் அருகேயுள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்த கட்டிட தொழிலாளி கொம்பையாவுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பாளை நடுவக்குறிச்சியில் கொம்பையாவும், முத்துபேச்சியும் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு கார்த்திக் (10), முத்துராமலிங்கம் (8) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கொம்பையா கடந்த ஒரு ஆண்டாக சரிவர வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து ஊரை சுற்றி வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து முத்துபேச்சியின் உறவினரான சுத்தமல்லியை சேர்ந்த குமார் அடிக்கடி வீட்டிற்கு வந்து பல்வேறு உதவிகள் செய்து வந்தார். இதன் காரணமாக முத்துபேச்சிக்கும் குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையறிந்த மாரியப்பன் தனது மகள் முத்துபேச்சியை பாளை மகாராஜநகருக்கு அழைத்து வந்தார். அங்கு கடந்த 9 மாதங்களாக முத்துபேச்சி இருந்து வந்தார். ஆனாலும் முத்துபேச்சி, குமாருடன் தொடர்பில் இருந்தார்.

இதனையறிந்த கொம்பையா மற்றும் மாரியப்பன் ஆகியோர் முத்துபேச்சியை கண்டித்தனர். ஆனால் அவர் அதனை கேட்காமல் குமாருடன் செல்போன் மூலம் பேசி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் நேற்று முத்துபேச்சியிடம் சொந்த ஊரான மேலப்பாட்டத்திலுள்ள வீட்டிற்கு சென்று வருவோம் என்று கூறினார்.

இதனை நம்பிய முத்துபேச்சி தனது தந்தை மாரியப்பனுடன் சென்றார். மேலப்பாட்டம் விலக்கில் இறங்கி ஊருக்குள் செல்வதற்காக அங்குள்ள காட்டுப்பகுதியில் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மாரியப்பன், முத்துபேச்சியிடம் குமாரிடம் பேசக்கூடாது என கண்டித்தார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன் அரிவாளால் முத்துபேச்சியை சரமாரியாக வெட்டி, தலையை துண்டித்து கொன்றார்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த பாளை போலீசார், மாரியப்பனை கைது செய்தனர். மேலும் முத்துபேச்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாரியப்பனை பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

three × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi