சென்னை: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு அளிப்பதாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என்று பல்முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாட்டில் நாளை முதல் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
திமுக நேரடியாக போட்டியிடும் 21 வேட்பாளர்களுக்கான பட்டியல் நாளை வெளியாக உள்ள நிலையில் மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலினை நேரடியாக சந்தித்த தமிமுன் அன்சாரி தலைமையிலான கட்சி நிர்வாகிகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிமுன் அன்சாரி; தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளோம்.
இந்தியாவின் ஜனநாயகம், பன்முகத்தன்மை காக்க இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டியது அவசியம். அதிமுகவுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்ததாக வெளியான தகவல் தவறானது இவ்வாறு கூறினார்.