டெல்லி : நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.நாட்டின் 77வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில், பிரதமர் மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து தேசியக் கொடி ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த உள்ளார்.
இந்த சூழலில் மனதின் குரல் நிகழ்ச்சியில் கடந்த மாதம் இறுதியில் பேசிய பிரதமர் மோடி, வீடுகள் தோறும் தேசியக்கொடி என்று இயக்கத்தின் கீழ் 13ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை மக்கள் அவரவர் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும். என் மண் என் தேசம் என்று இயக்கத்தின் கீழ் அவரவர் பகுதிகளில் இந்த தேசத்தின் புனித மண்ணை கையில் ஏந்தியவாறு செல்பி எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளப் பக்கங்களின் முகப்பு படத்தில் தேசிய கொடியை வைத்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:”இல்லந்தோறும் மூவர்ணக் கொடி #HarGharTiranga இயக்கத்தின் உணர்வில், நமது சமூக ஊடகக் கணக்குகளின் காட்சிப் படங்களை மாற்றுவதுடன், இந்த தனித்துவமான முயற்சிக்கு ஆதரவை வழங்குவோம், இது நம் அன்புக்குரிய நாட்டிற்கும், நமக்கும் இடையிலான பிணைப்பை ஆழப்படுத்தும்.”எனத் தெரிவித்துள்ளார்.