திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயலால் பாதித்த 23 மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களை தேடிச் சென்று தலா 5 கிலோ அரிசி, மளிகைப்பொருட்கள், வேட்டி, சேலை, போர்வை, ரொட்டி மற்றும் பிஸ்கட்ஸ் ஆகியவற்றை கலெக்டர் த.பிரபு சங்கர் வழங்கினார். தமிழ்நாடு முதல்வர் வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் மழையால் வாழ்வாதாரம் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு இல்லம் தேடி நேரில் நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு ஒவ்வொரு மாவட்ட கலெக்டரையும் அறிவுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 600 மாற்றுத்திறனாளிகளுக்கு மேல் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி முதல் கட்டமாக திருவள்ளூர் அருகே பீமன்தோப்பு ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் இல்லம் தேடி நேரில் சென்று கலெக்டர் த.பிரபு சங்கர் அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். இதேபோல் அந்த ஊராட்சியில் 23 மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கு நேரில் தலா 5 கிலோ அரிசி, மளிகைப்பொருட்கள், வேட்டி, சேலை, போர்வை, ரொட்டி மற்றும் பிஸ்கட்ஸ் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் போது வட்டாட்சியர் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் சேகர், அன்பரசு, சக்திவேல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பேச்சு பயிற்சியாளர் காயத்திரி, அலுவலக பணியாளர் ராஜேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.