சென்னை : இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை கூட வற்புறுத்தி திணிப்பதால் போய் விட்டது என்று சர்மிளா ராஜசேகர் தெரிவித்துள்ளார். கோவா விமான நிலையத்தில் இந்தியை கற்கக் கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் சர்மிளா ராஜசேகர், விமான நிலைய பாதுகாவலர்களால் மிரட்டப்பட்டுள்ளார். கோவா விமான நிலையத்தில் தமிழ் பெண் அவமதிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், சர்மிளா ராஜசேகர் சன் நியூஸுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்தி தேசிய மொழி என்று கூறி விமான நிலைய பாதுகாவலர்கள் என்னை மிரட்டினர். இந்தி அலுவல் மொழி மட்டுமே என்று தான் விளக்கம் அளித்தபோதும் சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் ஏற்க மறுத்து மிரட்டல் விடுத்தனர். எனக்கு ஏற்பட்ட பாதிப்பு பிறருக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே மிரட்டல் குறித்து புகார் அளித்தேன்.சிஐஎஸ்எஃப் வீரரின் அத்துமீறல் குறித்து அவரது உயரதிகாரியிடம் உடனே புகார் அளித்தோம்.இந்தி கற்கும்படி கோவா விமான நிலையத்திலேயே மேலும் பலர் மிரட்டப்பட்டதாக கூறியதை அடுத்தே புகார் அளித்தோம். இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை கூட வற்புறுத்தி திணிப்பதால் போய் விட்டது. பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு யாரும் பாடம் நடத்தத் தேவையில்லை,”என்றார்.