டெல்லி: இமாச்சலப்பிரதேசம், டெல்லி, மும்பை உள்பட வடமாநிலங்களில் தொடரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, இமாச்சலப்பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் ஆர்.கே.புரம் பகுதியில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இமாச்சலில் மழைக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
14 பேர் காயமடைந்துள்ளதாகவும், 104 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. சாலைகளில் மழை, வெள்ளத்துடன் கழிவுநீரும் சேர்ந்து பல இடங்களில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சிம்லா மாவட்டத்தில் பெய்யும் மழையால் ஹோட்டல் அறைக்குள்ளேயே முடங்கி கிடப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.