புதுடெல்லி: இமாச்சல் விபத்தில் பலியான சைதை துரைசாமியின் மகனின் மூளை உள்ளிட்ட பாகங்கள் கிடைத்துள்ளதால் அவற்றை தடயவியல் சோதனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மற்றும் சைதாப்பேட்டை முன்னாள் எம்எல்ஏ சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45), கடந்த சில நாட்களுக்கு முன் இமாச்சல பிரதேசத்துக்கு திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த நண்பர் கோபிநாத் என்பவருடன் சுற்றுலா சென்றார். கடந்த 4ம் தேதி மாலை கசாங் நளா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை-5-ல் காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை ஒட்டி இருந்த சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்தது. ஓட்டுநர் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
சைதை துரைசாமி மகன் வெற்றியை தேடும் பணியில் கடந்த 3 நாட்களாக அம்மாநில போலீசார், பேரிடர் மீட்பு படையினர், பழங்குடியின மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான வாகனத்தின் சில பகுதிகள் கைப்பற்றப்பட்டது. ஒருவரின் உடல் பாகங்கள், மூளை உள்ளிட்ட உறுப்புகள் சிதைந்த நிலையில் கிடைத்துள்ளன. அவற்றை எடுத்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து இமாச்சல பிரதேசம் சென்றுள்ள சைதை துரைசாமி, மகன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும், பழங்குடியின மக்களை சந்தித்து மகனை மீட்க உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.