சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், அனுமதியின்றி பூட்டர் பவுண்ேடசன் என்ற தனியார் நிறுவனம் தொடங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இதுகுறித்து கேட்டபோது சாதியை கூறி திட்டியதாகவும், தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கருப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் சதீஷ் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட துணைவேந்தர் ஜெகநாதன், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பதிவாளர் உள்ளிட்ட 3 பேரும் தலைமறைவாகினர். இதனிடையே, தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, துணைவேந்தர் ஜெகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதனையடுத்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த பதிவாளர் தங்கவேல் மற்றும் பேராசிரியர் சதீஷ் ஆகிய 2 பேரும் நேற்று பல்கலைக்கழகத்திற்கு வந்து பணியை தொடர்ந்தனர்.