சென்னை: தொப்பூரில் விபத்துகளை தடுக்க உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்க வேண்டும்.
தொப்பூர் பகுதி நெடுஞ்சாலை நாளுக்கு நாள் அதிக விபத்து நடக்கும் பகுதியாகவும், உயிர்ப்பலி வாங்கும் சாலையாகவும் மாறி வருகிறது என்பதையும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஒன்றிய அரசால் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள தொப்பூர் உயர்மட்ட சாலை திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவது மட்டும்தான் உயிரிழப்புகளை தடுப்பதற்கு ஒரே தீர்வாகும்.
இதை உணர்ந்து இந்த திட்டத்திற்கான ஒப்பந்த புள்ளிகளை உடனடியாக இறுதி செய்து பணிகளை தொடங்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.