உத்திரமேரூர்: உத்திரமேரூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மீனாட்சியம்மாள் கல்லூரி மாணவர்கள் இருச்சக்கர வாகனத்தில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உத்திரமேரூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், ஹெல்மெட் அவசியம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர் விநாயகம், பேரூராட்சி செயல் அலுவலர் லதா, கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்கள் தனசேகரன், சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், காஞ்சிபுரம் மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியினை கொடியிசைத்து துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
பேரணியில் மீனாட்சி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலத்திட்ட மாணவர்கள் கலந்துகொண்டு, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தவாறு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியானது ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயில் அருகில் துவங்கி பஜார் வீதி, சன்னதி தெரு, எஸ்பி கோயில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி ஆசிரியர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.