கூடுவாஞ்சேரி: முகூர்த்த தினத்தை முன்னிட்டு கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நெரிசல் ஏற்பட்டது. இதில் 10 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகித்து நின்றதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான பெருங்களத்தூர், வண்டலூர், ஓட்டேரி, கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, தைலாவரம், காட்டாங்குளத்தூர், மறைமலைநகர் உள்ளிட்ட ஜிஎஸ்டி சாலையில் இருபுறமும் 10 கிலோ மீட்டர் தூரம் வரை நேற்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் சனி, மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை மற்றும் இன்று சுப முகூர்த்த தினம் என்பதால் அதிக வாகனங்கள் நேற்று இரவு முதல் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்து சென்றன.
இதனால் கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர் என சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் சென்னையில் இருந்து அதிக வாகனங்கள் சென்றதால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்க்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டனர். போக்குவரத்து போலீசார் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்து வருகின்றனர்.