சென்னை:தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இதனால், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வால்பாறையில் 130 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் பொன்னேரி, தண்டையார்பேட்டை, அயனாவரம், பெரம்பூர், சென்னை ஆட்சியர் அலுவலகம், சோழிங்கநல்லூர், அண்ணா பல்கலைக் கழகம், கத்திவாக்கம், டிஜிபி அலுவலகம், திருவொற்றியூர், பகுதிகளில் 20 மிமீ முதல் 10 மிமீ வரை மழை பெய்துள்ளது.
இந்நிலையில், பருவமழை காரணமாக வட தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதேநிலை 8ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.