இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் ஓர் இன்றியமையாத உணவாக மாறி இருக்கிறது பானி பூரி. கிராமம், நகரம், மாநகரம் என அனைத்து பகுதிகளில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களையும் வசீகரித்திருக்கிறது இந்த பானிபூரி. கண்ணாடி போட்ட தள்ளுவண்டியில், பொரித்து வைத்திருக்கும் சிறிய அளவிலான இந்த பானிபூரிகளைப் பார்க்கும்போதே, சாப்பிட வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் பிறக்கும். பானிபூரியை அங்கேயே நின்று சாப்பிடும் ஆட்களை விட பார்சல் வாங்கி வீட்டிற்கு எடுத்துச் செல்லும் நபர்கள் மிக அதிகம். மாலை நேரங்களில் சிலருக்கு இது மிகப்பிடித்த நொறுக்குத்தீனியாகி இருக்கிறது. சிலருக்கு இரவு உணவாகவே விளங்குகிறது.
இத்தகைய பானிபூரியைச் சுவைக்கும் நீங்கள், அதன் சுவாரஸ்யமான வரலாற்றையும் கொஞ்சம் சுவைத்துப் பாருங்கள்! பானிபூரியின் பிறப்பிடம் இந்தியாதான். அதுவும் வட இந்தியாவாகத்தான் இருக்கும் என்பது நமக்கு யாரும் சொல்லாமலே தெரிந்துவிடும். சரியாக சொல்வதென்றால் மேற்கு-மத்திய பீகாரில் உள்ள கங்கை நதிக்கரைதான் பானிபூரி பிறந்த இடம். மகாபாரதக் கதைகளில் மகாஜன பந்தங்கள் என 16 பெரிய சாம்ராஜ்யங்கள் பற்றிய குறிப்பிருக்கிறது. இந்த சாம்ராஜ்யங்கள் கோலோச்சிய பகுதியில் மகத நாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மகத நாட்டில்தான் பானிபூரியின் முன்னோடியான `புல்கிஸ்’ தோன்றியதாக கூறப்படுகிறது.
மகாபாரதத்தையொட்டி எழுந்த சில உபகதைகள் வடநாட்டில் ரொம்பவே பிரபலம் ஆகியிருக்கிறது. அப்படி ஒரு உபகதைதான் பானிபூரியையும் பிரபலம் ஆக்கியிருக்கிறது. பஞ்ச பாண்டவர்களுக்கு சோதனைக்காலம் என்றால் அது வனவாசக் காலம்தான். அத்தகைய வனவாசக்காலத்தில் பாண்டவர்களின் அன்னையான குந்திதேவி, தனது மருமகளான திரௌபதியின் திறமையை சோதிக்க விரும்பி இருக்கிறார். குறைந்த அளவிலான தானியங்களும், காய்கறிகளும் மட்டுமே எஞ்சி இருந்த ஒரு தருணத்தில் கொஞ்சம் உருளைக்கிழங்கு பொரியலையும், பூரி செய்வதற்கான கொஞ்சம் கோதுமை மாவையும் கொடுத்து தனது ஐந்து மகன்களின் பசியை போக்குமாறு திரௌபதிக்கு கட்டளை இட்டிருக்கிறார் குந்திதேவி.
தனக்கு கொடுக்கப்பட்ட சிறிய அளவிலான கோதுமை மாவைக் கொண்டு சிறுசிறு பூரிகளை தயார் செய்து அதனுள் எஞ்சி இருந்த உருளைக் கிழங்குப் பொரியலை அடைத்து, காரம் கலந்த தண்ணீரை அதில் ஊற்றி பாண்டவர்களுக்கு பரிமாறி இருக்கிறார் திரௌபதி. இந்த சிறிய அளவிலான பானிபூரி பாண்டவர்களின் வயிற்றை நிரப்பி, பாராட்டையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது. இதை தனது தாயார் குந்திதேவியிடம் கூறி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள் பாண்டவர்கள். அவரும் தனது புதிய மருமகளை நினைத்து மனம் குளிர்ந்திருக்கிறார். இப்படித்தான் பானிபூரி உருவானதாகவும், அது மக்களிடையே பிரபலம் அடைந்ததாகவும் ஒரு செவி வழி கதை உலவுகிறது.
உருளைக்கிழங்குக்கு தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மற்றும் பெரு பகுதிதான் பூர்வீகம். கடந்த 300 ஆண்டுகளாகத்தான் இந்தியாவில் இது பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் பல காலத்திற்கு முன்பே நிகழ்ந்ததாக கூறப்படும் மகாபாரதத்தில், குந்திதேவிக்கும் திரௌபதிக்கும் பானிபூரி செய்ய எப்படி உருளைக்கிழங்கு கிடைத்திருக்கும்? என்ற கேள்விகளை ஒருதரப்பினர் பகுத்தறிவுக் கண் கொண்டு எழுப்பி வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் ராஜ் கச்சோரி என்னும் உணவு வகையில் இருந்தே பானிபூரி தோன்றி இருக்கலாம் எனவும், 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு புலம் பெயர்ந்தவர்களின் மூலம் இந்தியா முழுவதும் பானிபூரி பரவி இருக்கலாம் எனவும் கூறுகிறார் சமையல் வரலாற்று ஆய்வாளர் குருஷ் தலால்.
எது எப்படியோ பானிபூரி நமது இந்திய உணவு என்பதையும், அதுவும் வட இந்திய உணவுதான் என்பதையும் அறுதியிட்டு கூற முடிகிறது. மகாபாரதத்தில் தோன்றியதோ, மகாபாரதத்தில் தோன்றியதோ! இன்று இந்தியா முழுக்க உள்ள அனைத்து மாநில மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறது பானிபூரி. இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களிலும் இது அழைக்கப்படுகிறது. மத்திய மற்றும் தென்னிந்தியாவில் பானிபூரி என்று அழைக்கப்பட்டாலும், பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபடும் செய்முறைகளால் பானிபூரிக்கு வெவ்வேறு பெயர்கள் சூட்டப்பட்டு இருக்கிறது. மகாராஷ்டிராவில் ரக்தா (வெள்ளை பட்டாணி கறி கலந்தது) என்றும், வட இந்தியாவில் சில பகுதிகளில் கோல் கப்பே, குப் சுப், பானி கே படாஷே அல்லது புல்கிஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஹோஷங்காபாத்தில் பானி பூரி டிக்கி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக வட இந்தியாவில் மிருதுவான உருளைக்கிழங்கு பஜ்ஜிகளைக் குறிக்க இந்தச் சொல் பயன்படுகிறது. மேற்கு வங்காளத்தில் பானி பூரியை ஃபுச்கா என பெயரிட்டு அழைக்கிறார்கள். பானிபூரியை வாயில்கடிக்கும்போது ‘ஃபுச்’ என்ற ஒலி எழுவதால் இந்த ஃபுச்கா என்ற காரணப் பெயரை வைத்திருக்கிறார்களாம் வங்கத்து சிங்கங்கள். பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என அழைக்கப்படுவதைப்போல, பல்வேறு மொழிகளில் பானிபூரிக்கு பல பெயர்கள் இருந்தாலும் நம் ஒவ்வொருவருக்கும் இது எப்போதும் பானிபூரிதான்.