சிட்னி: ஹமாஸ் இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி அப்பாவி மக்களை கொன்று குவித்து வரும் இஸ்ரேல் அரசுக்கு உலகம் முழுவதும் தொடர்ந்து கண்டன குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் காசா நகர மக்களுக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் மட்டுமல்லாது, யூத மக்களும் பங்கேற்று இஸ்ரேலிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மனிதாபிமானம் உள்ள யாரும் பாலஸ்தீன மக்கள் பக்கமே நிற்பார்கள் என்று போராட்டத்தில் பங்கேற்ற யூத மக்கள் தெரிவித்தனர். பாலஸ்தீனத்தில் இன படுகொலையை இஸ்ரேல் செய்கிறது என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் பேரணி நடைபெற்றது. நியுயார்க் நகரில் பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேல் அரசுக்கு போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இஸ்ரேல் வீசும் வெடிகுண்டுகளை அமெரிக்காவே வழங்குகிறது என்று குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், இன்று எத்தனை பச்சிளம் குழந்தைகளை கொன்று குவித்தீர்கள் என்று கேட்டு முழக்கங்களை எழுப்பினார்கள். போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வரும் மக்களுக்கு சிகிச்சை அளித்தும், பிற உதவிகளை செய்தும் வருகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தாங்கள் உதவுவதற்காக இஸ்ரேல் அரசு தற்காலிக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.