சென்னை: ‘‘ஹமாஸ் தீவிரவாதிகளின் கடுமையான தாக்குதலில் இருந்து தப்பித்து, தற்போது இஸ்ரேல் நாட்டின் ஒரு பகுதியில் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம்’’ என்று தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ளது. இதனால், அங்கிருக்கும் இந்தியர்களுக்கு தூதரகங்கள் மூலம் பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும், அவர்கள் தொடர்பு கொள்ள 9723522678 என்ற எண்களும் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் தூதரகத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளை கோரி வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரேலில் வசிக்கும் தமிழக மாணவர் மணிகண்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம், நானும் என்னுடன் படிக்கும் தினேஷ் பாபுவும் ஆராய்ச்சி படிப்புக்காக இஸ்ரேல் வந்திருந்தோம். நாங்கள் இருவரும் கொரியன் பல்கலைகழகத்தில் இருக்கிறோம். இங்கு தொடர்ந்து போர் நடந்த வண்ணம் உள்ளது. ஆனாலும், நாங்கள் பத்திரமாக இருக்கிறோம். நாங்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு அருகே ஹர்பன்ட்ஸ் நகரத்தில் இருந்து எங்களுக்கு தேவையான உதவிகள் செய்து தருவதாக தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், நாங்கள் பாதுகாப்பாக தான் இருக்கிறோம். அரசும் முழு உதவிகளையும் செய்து வருகிறது. எங்களுக்கு இ-மெயில் மூலமாக தகுந்த ஆலோசனைகள் தருகிறார்கள். தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.