அகமதாபாத்: குஜராத் கடல் பகுதியில் பயணித்த பாகிஸ்தான் படகில் இருந்து ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளது. போதைப் பொருளை கடத்திய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தான் படகில் இருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக குஜராத் தீவிரவாத தடுப்புப் படை மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அரபிக்கடலில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்திய கடலோர காவல் படையின் ஐசிஜி ராஜ்ரதன் கப்பலும், விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன.
இதன் மூலம், பாகிஸ்தான் படகில் கடத்தி வரப்பட்ட 86 கிலோ எடையுள்ள ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய கடலோர காவல் படை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. படகிலிருந்து 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எந்த வகை போதைப்பொருள் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. முன்னதாக நேற்று முன்தினம் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் செயல்பட்ட போதைப்பொருள் தொழிற்சாலைகளில் இருந்து ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.